திருவள்ளூரை அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது25) தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இந்தநிலையில் திருமணம் செய்துகொள்ளும் படி காதலனிடம் ஜெயலட்சுமி தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது.
இன்று காலை ஜெயலட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் திடீரென வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற ஜெயலட்சுமி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயலட்சுமியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கடைசியாக யாரிடம் பேசினார்? என்பது குறித்து அவரது செல்போனை கைப்பற்றி விபரங்களை சேகரித்து வருகிறார்கள். அவரது காதலனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.