நீர்மட்டம் குறைந்தும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் கூழாங்கல் ஆறு. 
தமிழக செய்திகள்

கொளுத்தும் வெயில்- வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது.

வால்பாறை:

கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று வால்பாறை.

இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

அரசு விடுமுறை தினங்கள், வாரவிடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். அவ்வாறு வருபவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தும், வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்டவற்றையும் பார்த்து செல்கின்றனர்.

வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப்பாறை அருவி, அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருகிறது.

இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்ததை பார்க்க முடிந்தது.