இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என திருவான்மியூர் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். நேற்று தனது கார் சேதமடைந்ததாக வீடியோ பதிவிட்ட அவர், இது "தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் சமீப நாட்களாக நடிகர் விஜய்யின் தவெகவிற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வரும்நிலையில், இது திட்டமிட்ட தாக்குதலோ என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் காவல்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் மதிய உணவுக்காகச் சென்றிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
உணவகத்தின் அருகே இருந்த வீட்டின் வாசலில் கார் நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளரே காரின் கண்ணாடியை உடைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.