தமிழக அரசின் துறையின் கீழ் உள்ள சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஆன்லைன் வசதி ஏற்கனவே உள்ளது. அரசு இ-சேவை மையங்களும் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர தனியார் இ-சேவை மையங்களும் பயன்பாட்டில் உள்ளன.
ஆனாலும் பொதுமக்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு சான்றிதழ்கள் பிற கால தாமதம் ஆகிறது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்கள் நேரடியாக அரசுத் துறையின் சேவைகளை பெறும் வகையில் ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய வசதியை தொடங்கி உள்ளது. அரசின் 20 துறைகளில் உள்ள 66 சேவைகள் இதன் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும். 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘வணக்கம் அல்லது ஹாய்’ என்று பதிவு செய்து இந்த சேவையை பெறலாம்.
தமிழில் சேவையை பெற வேண்டும் என்றால் டி (T) என பதிவிட வேண்டும். ஆங்கிலத்தில் சேவையை பெற வேண்டும் என்றால் இ (E) என பதிவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து எந்த துறையில் சேவை வேண்டும் என்று குறிப்பிட்டால் அந்த சேவை கிடைக்கும். வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டால் 18004256000 என்ற எண்ணை தொடர்புக் கொள்ள வேண்டும்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் வாட்ஸ்அப் மூலம் எளிதாக பெறலாம்.
இதுதவிர மின்கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, தொழில் உரிமம் போன்ற சேவைகளும் செல்போன் வழியாக பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் விண்ணப்பித்துள்ள தங்களின் விண்ணப்பத்தின் நிலையையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். இந்த வசதியை பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மிக எளிமையான முறையில் சரியான தகவல்களை உள்ளீடு செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.