தமிழக செய்திகள்

நேபாள வெள்ளம்: தமிழக சுற்றுலா பயணிகள் 37 பேர் மாயம்!

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

நேபாளத்தின் மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளை துண்டித்துள்ள நிலையில், மானசரோவர் யாத்திரை சென்ற பல யாத்ரீகர்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர்; மேலும் பலர் அங்கு சிக்கித் தவிக்கின்றனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் உதவ உதவி எண்களை (helplines) அறிவித்துள்ளன.

37 தமிழர்கள் நிலை கேள்விக்குறி:

பாதிக்கப்பட்ட இந்தியர்களில் குறைந்தது 59 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் என்று 'சம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 சுற்றுலா பயணிகளில் 37 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை என்றும், 20 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுற்றுலாப் பயணிகள் இமயமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயம்புத்தூரை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ஈஷா அறக்கட்டளை, குடியேற்ற மையத்தில் இருந்த தங்கள் அமைப்பை சேர்ந்த 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.

495 பேர் பாதுகாப்பாக திரும்பினர்:

"குடியேற்ற அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை," என்று அதன் நிறுவனர் சத்குரு கூறினார்; அதேவேளையில் 495 பேர் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த குறிப்பிட்ட குடியேற்ற மையத்தின் ஊழியர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக நேபாள அரசு பின்னர் தெரிவித்தது.

இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பலரும் அண்டை நாடான நேபாளத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. சாலை வழியாக தனது சகாக்களுடன் நேபாளம் சென்றிருந்த விவசாய தலைவர் ராகேஷ் திகாயத், பொக்ஹாராவில் சிக்கிக்கொண்டார்.

"தற்போதைய சூழல் காரணமாக, சாலை வழியாகப் பயணம் செய்வது சாத்தியமில்லை என்பதால், எங்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு, நாளை விமானம் மூலம் காத்மாண்டு சென்று, அங்கிருந்து தில்லிக்கு விமானத்தில் திரும்புவோம்," என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஒரு காணொளி செய்தியில் தெரிவித்தார்.