தமிழக செய்திகள்

நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவம் தமிழ்நாடு அரசின் தோல்வியை காட்டுகிறது - ஷியாம் கிருஷ்ணசாமி

அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார்.கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

Maalaimalar

களக்காடு:

நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ந் தேதி இரவில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல்துறையில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அஜித்குமாரும், ஆகாசும் இதனால்தான் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நாங்குநேரி சம்பவம் அரசின் தோல்வியை காட்டுகிறது. முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை முன் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.