நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

‘கள்’ இறக்கப் பரிந்துரை - நயினார் நாகேந்திரன் வரவேற்பு

இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.

மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தார்மீக வெற்றி

மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக பா.ஜ.க. தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.

எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும், த.வெ.க. அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜயை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT