பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பழனி கிரிவீதிகளில் உள்ள 4 அம்மன் கோயில்களிலும் தரிசனம் மேற்கொண்டார்.
தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
வருகின்ற மே மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்பார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தோடு தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.
இதனால் தேர்தல் முடிவுகளில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.