மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மறைந்த மு.க.முத்துவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மு.க.முத்து கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர். தனது இனிமையான குரலில் சிறந்த சமூக நல்லிணக்க பாடல்களையும் பாடியவர். சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தொடர் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி மறைவுற்றுள்ளார்.
அவரது மறைவால் துயருற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.