தமிழக செய்திகள்

சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை))சட்ட மசோதாவை திரும்பப் பெற, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை தேவை என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மசோதாவை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நமது நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் குழுவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த உயர்மட்ட மதத் தலைவர்களும், 6.8.2026 அன்று உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், FCRA-வின் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுடன் நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

முன்மொழியப்பட்ட இந்த மசோதாவின் நீண்டகால விளைவுகள் காரணமாக, அதன் விதிகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.