தமிழக செய்திகள்

திமுக அரசு திட்டங்களை போட்டி போட்டு பாராட்டும் பாமக எம்.எல்.ஏ.-க்கள்: சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

இரண்டு பாமக எம்.எல்.ஏ.-க்கள் ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர்.அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும்.

சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கி பேசினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

இங்கு நடப்பது அரசு விழாவா? மகளிர் விழாவா? என்ற அளவிற்கு எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு வந்துள்ளீர்கள். இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. நம்முடைய கூட்டணியில் கூட (இப்போது) கிடையாது.

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும், சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பாராட்டுகள் என போட்டி போட்டு கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.