தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஆன்மீக சுற்றுலா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியக் கோரிக்கையின் போது, 60 வயதிற்கு மேல் 70 வயதுக்கு உள்ளே இருக்கும் 200 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தோம்.
அதற்குரிய 5 லட்சம் ரூபாய் செலவுத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த பயணத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் முதியவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிர்காலம் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதியை பெற்று காசிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.