முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார் என்று அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை. அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது. எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது.
சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? நாங்கள் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.
எங்கள் அரசின் மீதும் முதல்-அமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு?
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார்.
தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.
கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து விட்டார்கள். அதில் தொடங்கப்படாத பல பணிகள் உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை. அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.