அமைச்சர் ராஜீவ் 
தமிழக செய்திகள்

மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது- அமைச்சர் ராஜீவ்

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

அதனை தொடர்ந்து, கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி

சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறியுள்ளார். புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து

ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் என்றார்.

அமைச்சர் ராஜீவ்

3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் HOEC நிறுவனம் மேலும் கிணறு அமைக்கும் விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீன்வளம் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது. சுற்றுச்சூழலுக்கு எதிரான, மீனவர்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தமிமுன் அன்சாரி

சுற்றுச்சூழுல் விழிப்புணர்வு ஏற்படும் முந்தைய காலத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியிருக்கலாம். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை. எந்த அரசு செய்தது என்ற வாதத்திற்கு செல்லாமல், மண் வளத்தை காக்கும் வகையில் தான் பேரவையில் இதுகுறித்து பேசுகிறோம் என்றார்.