தமிழ்நாடு செய்திகள்

பிரதமரே ஒத்துக்கொள்வதால் கவர்னர் இனி என்ன சொல்லப்போகிறார்? - ரகுபதி கேள்வி

தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் கவர்னர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!கவர்னர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

Maalaimalar

சென்னை:

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பா.ஜ.க. ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை கவர்னர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் கவர்னர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!

கவர்னரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர் கவர்னருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் கவர்னர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் கவர்னர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் கவர்னர் ரவி அவர்களே?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.