சென்னையில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்சார தொடர்மைப்பு கழக துணை மின்சார நிலையத்தை மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
மின்சார துறையை யார் இதற்கு முன்பு நிர்வகித்தார்கள் என்று தெரியும் ஒரு சிலர் துறையை நிர்வகித்தால் என்ன நிலையாகும் என்றும் தெரியும். அடிப்படையில் இதை சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த துறை எப்படி மாறப்போகிறது என்பதை பார்ப்பீர்கள் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முழுமையான விசாரணை இன்னும் முடியவில்லை. பணியிடை நீக்கம் செய்த நபர் ஒருவர் மீது சி.பி.ஐ. வழக்கு மற்றும் பல குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற நபர்கள் இனி இந்த வளாகத்திற்குள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.8 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு ரூ.13 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை சரி செய்ய வேண்டி உள்ளது. சூரிய மின்சார உற்பத்தி தகடுக்கான முதலீட்டில் மறைமுக 'டீலிங்' இருக்காது. ஒப்பந்தப்புள்ளி முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனிமேல் எந்த புரோக்கர்களுக்கும் இந்த அலுவலகத்தில் வேலை இல்லை. இந்த நிர்வாகம் முழுமையாக சீரமைக்கப்படும். விசாரணை முடிந்து யார் மீது குற்றம் இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் நடைமுறை வேறு. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அரசு எந்தவிதத்திலும் மின்சார கட்டண உயர்வும் செய்யாது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து சி.பி.ஐ. முடிவு செய்யும். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்ற போது நான் எந்த விதிமீறல் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.