சென்னை:
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர். பி.உதயகுமார், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.
அப்போது அவர்கள் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் கிராமப் புறங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இடிதாங்கிகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுசியதாவது:-
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி வருகிற 22-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கிராமப்புறங்களில் மின்னல் தாக்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதன்படி கிராம பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் இடி தாங்கிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.