மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், 8 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிட, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த மகேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இடைக்கால நிவாரண தொகையாக மூவாயிரம் கோடி ரூபாயை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தினார்.
இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், மிச்சாங் புயல் நிவாரணம் தொடர்பாக, ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் முறையிடலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.