கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து இந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது. தமிழகம்-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவை குறைத்து விட்டனர். இதனால் நேற்று மேட்டூர் அணையில் விநாடிக்கு 1,087 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,075 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இன்று நீர்மட்டம் 80.59 அடியாகவும், நீர் இருப்பு 42.54 டி.எம்.சி.யாகவும் நீடிக்கிறது.