தமிழக செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக விட்டு விட்டு தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் திறக்கப்பட்டு காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது.

இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரம் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக விட்டு விட்டு தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் மழையின் காரணமாக இன்று காலை வினாடிக்கு 2800 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.52 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 44.51 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.