கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

Metro Train| திருவான்மியூர்- இந்திராநகர் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி முடிய 6 மாதம் ஆகும்

கடினமான பாறைகள் இருப்பதால் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணி 118.9 கி.மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டர் தூரத்தில் 19 உயர்நிலைப்பாதை மற்றும் 28 சுரங்கப்பாதைகளில் ரெயில்நிலையங்கள் அமைகிறது. மொத்தம் 26.8 கி.மீ தூரம் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட உள்ளது.

இதில் திருவான்மியூர்-இந்திரா நகர் இடையே உள்ள பகுதியும் ஒன்று. 650 மீ தூரத்தில் இந்த பணிகள் நடக்கிறது. இந்த சுரங்கப்பாதை பணி ஏற்கனவே பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் திருவான்மியூர் பகுதியில் சுரங்கப்பாதை பணிக்கு துளையிடும் எந்திரம் இறக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது சுமார் 100 மீட்டர் தூரம் துளையிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு கடினமான பாறைகள் இருப்பதால் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. இந்த பணி முடிய 6 மாதத்திற்கு மேல் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திருவான்மியூர் பகுதியில் கடினமான பாறைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் கிரானைட் போன்ற உயர் தரமான பாறைகளாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இதை உடைப்பது கொஞ்சம் கடினம். முதலில் பாறையை வெடிவைத்து தகர்த்து சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் திட்டமிட்டார். பின்னர் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பாறைகள் சிதைக்கப்படுகிறது. கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடும் எந்திரத்தின் வெட்டும் பகுதி சேதம் அடைந்து அடிக்கடி மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இந்த துளையிடும் எந்திரம் இந்திரா நகர் வரை செல்வதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகும். முதல் துளையிடும் எந்திரம் இந்திரா நகர் சென்ற பின்னரே 2-வது எந்திரத்தை இயக்க முடியும் என்றார்.