தமிழக செய்திகள்

தேனியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார்.

தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின், திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

ரூ.2.50 கோடியில் அமையவுள்ள நினைவுச் சின்னம்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார். அவரது கலை சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியீடு மற்றும் முதற்கட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என உறுதியளித்தார்.

இயக்குநர் பாரதிராஜாவிற்கு அவரது சொந்த மண் அமைந்த தேனியிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என்ற இச்செய்தி, சினிமா ரசிகர்கள், கலை உலகத்தினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் கலைப் பொருட்கள் இந்த மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளன.