சென்னையில் இன்று மாநகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா மற்றும் தவெக எம்.எல்.ஏ. பல்லவி இடையே மோதல் வெடித்தது சர்ச்சையாகியாகி உள்ளது.
விழாவில் தன்னை புறக்கணித்தாக எம்.எல்.ஏ.பல்லவி கூறும்நிலையில், விழா நெறிமுறைகளின்படியே அனைத்தும் நடந்தது என மேயர் பிரியா கூறுகிறார். இதனால் பலருக்கும் இந்த நிகழ்வின் வழிகாட்டு நெறிமுறை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சர்ச்சைக்கு காரணம் என்ன?
இன்று சென்னை திருவிக நகர் தொகுதியின் புளியந்தோப்பு மற்றும் நம்மாழ்வார்பேட்டை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டது. இதில் மேயர் பிரியா, மாவட்ட ஆட்சியர், தவெக எம்எல்ஏ பல்லவி ஆகியோர் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்துவைத்தனர்.
முதலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பு உருது நடுநிலைப் பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிய மேயர் பிரியா, அதனை அருகில் இருந்த எம்.எல்.ஏ. பல்லவியிடம் தராமல் அவரையடுத்து நின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கொடுத்தார்.
இதனால் தன்னை அவமதித்தாககூறி அங்கிருந்து கோபித்து சென்றார் தவெக எம்.எல்.ஏ. பல்லவி. முன்னதாக ரிப்பன் வெட்டும்போது தவெக எம்.எல்.ஏ. மேயர் பிரியாவை முந்திகொண்டு ரிப்பனை வெட்டினார். இதனைத்தொடர்ந்தே இந்த நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப் பள்ளி நிழ்ச்சியில் மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு எம்எல்ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார். முதல் நிகழ்வில் மெழுகுவர்த்தி தராததால் இரண்டாவது நிகழ்வில் மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ.பல்லவி வாங்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையாக மேயர் பிரியாவும், எம்.எல்.ஏ.வும் இதுதொடர்பாக பேசினர். அப்போது, நமது கோபத்தை காட்டவேண்டிய இடம் பள்ளி நிகழ்ச்சி அல்ல என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய மேயர் பிரியா,
‘இதில் அவர்களை அசிங்கப்படுத்த எதுவும் இல்லை. 8.45 நிகழ்ச்சி வர சொன்னதற்கு 9 மணிக்கு வந்தார். நாங்கள் புறக்கணிக்க வேண்டும் என நினைத்திருந்தால் முதலிலேயே கட்டிடத்தை திறந்திருப்போம். ரிப்பன் கட் பண்ணும்போதும் கூட எனக்கு முன்பு வேறு கத்திரிக்கோலை எடுத்து அவர் கட் செய்தார்.
அடுத்தது குத்துவிளக்கு ஏற்றினோம். மேயர் நிகழ்ச்சி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நான் முதலில் ஏற்றிறேன். அடுத்து மாவட்ட ஆட்சியர், அதன்பிறகுதான் எம்.எல்.ஏ. அதன்படிதான் இன்று செய்தோம். அவரை அவதூறு செய்யும்விதமாக நாங்கள் யாரும் பேசவில்லை.
அவராகத்தான் வெளியேசென்றார். இரண்டாவது நிகழ்ச்சியில் நான் கொடுத்தேன். அவர் வாங்கவில்லை. பிரச்சனை செய்யவேண்டும் என செய்பவர்களிடம் என்ன பேசுவது’ என விளக்கமளித்துள்ளார்.
மேயர் பிரியா விளக்களித்தாலும் இந்த நிகழ்வு தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் மாநகராட்சி நிகழ்வின் நெறிமுறை பலருக்கு தெரியாததே.
தமிழ்நாடு அரசின் நெறிமுறைப்படி, மாநகராட்சி விழாக்களில் அதிகாரப்பூர்வ முன்னுரிமை வரிசை பின்வருமாறுதான் அமையும்.
மாநகராட்சியின் முதல் குடிமகன் மற்றும் நகர்மன்றத் தலைவர் என்பதால், மாநகராட்சி எல்லைக்குள் நடக்கும் விழாக்களில் மேயருக்கே முதல் மரியாதை மற்றும் முன்னுரிமை வழங்கப்படும். மேயருக்கு அடுத்தபடியாக, முதலமைச்சர் கலந்துகொண்டால் முதலமைச்சருக்கு, அல்லது அமைச்சருக்கு.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு அல்லது அவரது அந்தஸ்தில் உள்ள மாநகராட்சி ஆணையருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்தடுத்து எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அடுத்து துணைமேயர், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.