தமிழக செய்திகள்

லஞ்சம் வாங்கியது உண்மை.. நானே அதற்கு சாட்சி!- அன்பில் மகேஷ் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தன்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறயதாவது:-

உயர்கல்வியில் எண்ணிக்கையா? தரமா? என்கிற கேள்வி எழுகிறது. எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம்தான் ரொம்ப முக்கியம்.

முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் விஸ்வநாத் அவர்களும் பங்கேற்றிருந்தார். அப்போது, எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் இருக்கிறது என்பது குறித்து விவாதித்தோம்.

நாமும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

அதில் பார்த்தீர்கள் என்றால், certification என்று சொல்வார்கள். அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை.

ஒரு ஐஓஎஸ் சான்றிதழ்கூட வாங்கவில்லை. எந்த சான்றிதழும் வாங்காமல் நாம் இத்தனை ஆண்டுகள் கல்லூரிகளை நடத்தி வந்திருக்கிறோம் என்றால், எப்படி தரம் வரும்.

எண்ணிக்கை மட்டுமே வரும். அதனடிப்படையில், எந்த முயற்சியும் எடுத்ததுபோல் தெரியவில்லை.

தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது.

லஞ்சம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் எனக்கும் ஓரளவுக்கு அனுபவம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்தோம். திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது.

அதில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு நாள் நான். கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது. இதனை பல இடங்களில் நான் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆதாரம் கேட்கின்றனர். சாட்சி கேட்கின்றனர். ஆவண சாட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இங்கு நானே ஒரு சாட்சி தான்.

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சபையில் இல்லை என்றாலும், இதைநான் கூறவேண்டும். இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இந்த விவகாரம் 3 நாட்களாக சுற்றுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அவர்கள் என் மீது வழக்குக்கூட போடட்டும். எதிர்க்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பது குறித்து நானே சொல்ல முடியும். சிறுபான்மை நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வாங்குனீர்கள் இவை அனைத்தும் என்னால் சொல்ல முடியும். இதுதான் சாட்சி.

இவ்வாறு கூறினார்.

நிதி அமைச்சர் மரிய வில்சனின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டிற்கு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.