மதுரையில் இன்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;
“மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று (13.07.2026) அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலி, சமாதானபுரத்தைச் சேரந்த சிறியபுஷ்பம் (56) க/பெ. ஜெயசீலன்,
இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 46) த/பெ. பொன்னுச்சாமி, திருச்சியைச் சேர்ந்த சூர்யா (வயது 29) த/பெ கணேசன், திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (வயது 60) த/பெ. கலில் ரஹ்மான், திருநெல்வேலி, திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் த/பெ. ஜான்சன், ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயும்,
மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெருமாள் (வயது 71), த/பெ. சின்னையா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு நபர்களுக்கும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்,
பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு நபர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.