தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து.

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, நாட்டாண்மை கட்டடம் முன்பு கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அப்போதைய தி.மு.க. அரசைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையின் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சேலம் டவுன் காவல்துறையினர் கடந்த 2021-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி, சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சாலையை வழிமறித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மீண்டும் சேலம் டவுன் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சேலம் டவுன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.