Anbumani condemns LPG Price Hike 
தமிழக செய்திகள்

‘மக்கள் வருவாய் 1% கூட உயராத நிலையில் எரிவாயு விலை 10.25% உயர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது’ - அன்புமணி ராமதாஸ்

கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.957க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, தற்போது இரண்டாவது முறையாக இந்த விலையேற்றம் நடந்துள்ளது. முன்னதாக மார்ச் 7ஆம் தேதி ஒரு சிலிண்டருக்கு ரூ.60 விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

“வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.29 உயர்த்தியுள்ளன. இதனால் சென்னையில் இதுவரை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு பயன்பாடுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.957.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு உருளை விலை அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.

கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இப்போது மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 868.50 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை 3 மாதங்களில் ரூ.89 உயர்ந்திருக்கிறது.

இந்தக் காலத்தில் மக்களின் வருவாய் ஒரு விழுக்காடு கூட உயராத நிலையில் எரிவாயு விலை 10.25% உயர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சமையல் எரிவாயு விலை உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களையும், நியாயங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்காசியப் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலையும் உயர்ந்திருப்பது தான் இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால், அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது.

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்களுக்கு தாங்கிக் கொள்ள வேண்டும்; மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT