சென்னை:
கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:
17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.
17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.