தமிழக செய்திகள்

அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்

உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள் என்றார்.

நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாகப் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

தரக்குறைவான கருத்து

இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

அதிர்ச்சியும், ஏமாற்றமும்

எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.

பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.

பெண்கள் பகடைக்காய் அல்ல

கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.

ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.