தமிழக செய்திகள்

கரூர் பெருந்துயரம்: சிபிஐ விசாரணை வளையத்தில் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

தவெக நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறது.

சம்பவம் நடந்தபோது சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கமளித்திருந்தார்.

ஆனால், காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், சிபிஐ தனது விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது ஆயுதப்படை டிஜிபி-யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ தனது விசாரணையை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT