தமிழ்நாடு செய்திகள்

Karur Stampede Case | டெல்லி வந்து செல்வதில் சிரமம்... சிபிஐயிடம் கோரிக்கை வைத்த விஜய்

மாலை மலர்

கரூர் வழக்கு விசாரணைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அவர் கரூருக்கு சென்றார். அங்கு வாகனத்தின் மேற்கூரையில் நின்று பேசினார். அவரை பார்ப்பதற்காக அங்கு பெருங்கூட்டம் கூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முதலில் தமிழக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்தது.

இந்த சம்பவத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகள் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சொல்லப்பட்டதால் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி, 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி, 3-வது முறையாக நேற்று விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கரூர் வழக்கு விசாரணைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலம் என்பதால் அடிக்கடி டெல்லி வந்து செல்வதில் சிரமம் இருக்கிறது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடந்த 3 விசாரணையிலும் சட்டத்திற்கு உட்பட்டு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும், வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை சிபிஐ பரிசீலிக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை மனு வழங்கி உள்ளது.