புதுடெல்லி:
கரூரில் த.வெ.க.தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் விஜய்யிடம் ஏற்கனவே 2 முறை டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆனார். நேற்று முன்தினம் விஜய்யிடம் 3-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினார்கள். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கரூர் சம்பவத்தில் ஆரம்பம் முதலே த.வெ.க.வினர் தி.மு.க. மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். கரூரில், பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பாடியபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் செருப்பை வீசியதாக த.வெ.க.வினர் கூறினர். செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளில் பல்வேறு புகார்களை முன் வைத்தனர்.
இதை தொடர்ந்து செந்தில்பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதை ஏற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
இந்த விசாரணை தமிழகத்தில் நிலவும் தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஒருபுறம் ஆளுங்கட்சி நிர்வாகி, மறுபுறம் புதிய அரசியல் சக்தியாக உரு வெடுத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய் என இரு முனைத் தாக்குதலில் இந்த வழக்கு நகர்வதால், வரும் நாட்களில் இந்த விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.