தமிழ்நாடு செய்திகள்

நாட்டை காப்பாற்ற விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும்- கனிமொழி எம்.பி

திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

மாலை மலர்

சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. 

ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.

இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.

விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.