நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.
இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது.
வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.