தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் வழக்கு: 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் புதியதாக தொடரப்பட்ட வழக்கில் தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் கைது.ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷச் சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது. மோசமான மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கும் கருணை காட்டக்கூடாது என என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த மாதம் 15 ந்தேதி ஜாமின் வழங்க நீதிபதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் புதியதாக தொடரப்பட்ட வழக்கில் தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் கைது செய்யப்பட்டனர். இவர்களை அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் கடந்த 27 ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தாமோதரன், விஜயா, கோவிந்தராஜ் மற்றும் பரமசிவம் ஆகியோரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

SCROLL FOR NEXT