கடற்கரை பகுதியில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காணலாம்.  
தமிழக செய்திகள்

இன்று காணும் பொங்கல்- கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Suresh K Jangir

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. காணும் பொங்கலான இன்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணமாக உள்ளனர். அவர்கள் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக சென்றதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று 2 மணிநேரம் முன்னதாக காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.