கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“என் முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணம். இன்று பல மாநிலங்களில் நம்மை பின்பற்றி திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நம் திட்டங்களை காப்பி அடிக்கும் அதிமுகவும் அதை கூறியுள்ளது.
சொல்வதை செய்யும் திறன் திமுகவிடம்தான் உள்ளது. ஆனால் இத்திட்டத்தை மோடி வரவேற்கவில்லை. மெட்ரோ லாபகரமாக இயங்கவில்லை என பேசியுள்ளார்.
மோடி பேச்சை தாண்டி செயல்படும் துணிச்சல் அதிமுகவிற்கு உள்ளதா? தமிழ்நாட்டை சீரழிக்க எண்ணற்ற திட்டங்களை என்டிஏ கூட்டணி வைத்துள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கான டிரெய்லர்தான் உதய் மின் திட்டம். அதுபோல தமிழை அழிக்கும் திட்டம் மும்மொழிக் கொள்கை.
அடுத்தவர்களின் வரிப்பணத்தை சுரண்டுவதற்கு வந்ததுதான் ஜிஎஸ்டி. மாநில மக்களே தங்கள் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையை நாசம் செய்வதற்கு ஒரே நாடு ஒரே திட்டம்.
விரைவில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தொகுதி மறு சீரமைப்பு. இப்படி நிறைய திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தையும் முறியடிக்க நம்மால் மட்டும்தான் முடியும்.
தமிழ்நாடு டாப் கியரில் செல்ல வேண்டும் என்றால், திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் வர வேண்டும். கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் பழனிசாமியின் டிரேட் மார்க். அதிமுக அமைச்சர்கள் குட்கா மாமுல் வாங்கினர். அவருக்கு தெரியாமலா இது நடந்தது.
பழனிசாமி அவர்களே தமிழ்நாடு போதைப்பொருள்மயமானது உங்கள் ஆட்சியில்தான். பட்டி, தொட்டி எல்லாம் போதைப்பொருள் விற்கப்பட்டது பழனிசாமி ஆட்சியில்தான். இதுபோல அவர்மேல் எண்ணற்ற பட்டியலை என்னால் போடமுடியும்.