தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்- அதிகாரிகள் கோட்டை விட்டது எப்படி?

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்து மாநில போலீசாரிடமும் இருக்கும்.சென்னையில் அதிகாரிகள் உஷாராக செயல்பட்டிருந்தால் 4 பேரும் சென்னை விமான நிலையத்திலேயே பிடிபட்டிருப்பார்கள்.

Maalaimalar

இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத்துக்கு விமானத்தில் பறந்த 4 பயங்கரவாதிகளையும் சென்னையில் உள்ள அதிகாரிகள் கோட்டை விட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்து மாநில போலீசாரிடமும் இருக்கும்.

இது போன்ற நபர்களை தமிழகத்தில் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள்.

குறிப்பாக இலங்கையில் இருந்து சென்னை வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைவருமே யார்-யார்? என்கிற கண்காணிப்பு எப்போதுமே தீவிரமாக நடைபெறும். அப்படி இருக்கும் போது சென்னையில் உள்ள அதிகாரிகள் 4 பயங்கரவாதிகளையும் பிடிக்காமல் கோட்டை விட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர் விமான நிலையத்திலேயே பயணிகளோடு பயணிகளாக 7 மணி நேரம் வரை காத்திருந்துள்ளனர். பின்னர் மாலை 6 மணி அளவில் அகமதாபாத் செல்லும் விமானத்தில் ஏறி குஜராத்துக்கு சென்று உள்ளனர். அப்போதுதான் அம்மாநில போலீசார் மடக்கி பிடித்து உள்ளனர்.

சென்னையில் அதிகாரிகள் உஷாராக செயல்பட்டிருந்தால் 4 பேரும் சென்னை விமான நிலையத்திலேயே பிடிபட்டிருப்பார்கள். அதிகாரிகள் 4 பயங்கரவாதிகளையும் பிடிக்காமல் கோட்டைவிட்டது பற்றியும் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.