தமிழக செய்திகள்

‘மக்கள், கோபத்தை போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தக் கூட தவெக ஆட்சியில் உரிமையில்லையா?’ - நயினார் நாகேந்திரன்

குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு எதிராக போராடியவர்களை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது.

நேற்று வரை சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இன்று தங்கள் கண்முன்னே பிணமாகக் கிடப்பதை அக்குழந்தையின் குடும்பத்தாராலும், உறவினர்களாலும் தாங்கிக் கொள்ள முடியுமா?

இன்று இக்குழந்தைக்கு நடந்த கொடூரம் நாளை நமது பிள்ளைக்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களை நிம்மதியாக இருக்க விடுமா? தங்களின் கோபத்தையும், அச்சத்தையும் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தக் கூட தவெக ஆட்சியில் மக்களுக்கு உரிமையில்லையா?

முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.