தமிழக செய்திகள்

ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள்? உதயநிதி குற்றச்சாட்டும்.. அமைச்சர் சரத் அளித்த விளக்கமும்..

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு சட்டசபை 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. அப்போது, கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியில் தவெக அமைச்சர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து நீக்கி திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் சரத் பதிலடி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.

திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது. அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?

திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.

அப்போது கே.என்.நேரு பேசுகையில்,"கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும்" என்றார்.