வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட பெண், வாலிபர்களை காணலாம். 
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்காக இளவட்டக்கல் தூக்கி பெண்கள், வாலிபர்கள் தீவிர பயிற்சி

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது.

Maalaimalar

பணகுடி:

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இதில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பங்குபெற ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று நடைபெற இருக்கும் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம்பெண்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இப்போட்டியில் உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது. ஒரு வார கால இடைவெளியில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இளம்பெண்கள், வாலிபர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.