தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.
ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கிடையில், பா.ம.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் வி.சி.க. ஆகியவற்றின் ஆதரவை எளிதாக பெற்றுவிடலாம் என்று எண்ணிய த.வெ.க.வின் கனவில் மண் விழுந்துவிட்டது. அந்த கட்சிகள் அனைத்தும் பின்வாங்கியுள்ளன. எனவே த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் விஜய் முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் இந்த பரபரப்பான அரசியல் சூழலால், தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத சூழலில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.