சென்னை:
நாகை மாவட்டத்தை சேர்ந்த 36 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். தமிழக கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்தபோது வானிலை மாற்றம் காரணமாக அவர்களால் கரை திரும்ப முடியவில்லை.
மேலும் அவர்களது படகில் என்ஜின் கோளாறும் ஏற்பட்டதால் நடுக்கடலிலேயே அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்.கஞ்சர் ரோந்து சென்றது. மீனவர்கள் கடலில் தவிப்பதை பார்த்த கடற்படை வீரர்கள் 3 படகுகளுடன் 36 மீனவர்களையும் மீட்டனர். மீனவர்கள் 36 பேரும் 2 நாட்களாக கடலில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் வழங்கிய கடற்படையினர் அவர்களை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை நாகை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுபற்றி கடற்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், மீனவர்கள் 3 மீன்பிடி கப்பல்களில் இருந்தனர். சவாலான சூழ்நிலையில் 30 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர். 2 நாட்களுக்கும் மேலாக கடலில் தவித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றார்.