தமிழக செய்திகள்

நெல்லையில் பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மாலை மலர்

நெல்லை:

மத்திய கிழக்கில் நிலவும் போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தமிழகத்திலும் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சில இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே பிரீமியம் பெட்ரோல் விலை 2 நாட்களுக்கு முன்பு ரூ.2 வரை உயர்ந்தது. இந்நிலையில் நெல்லையில் நயாரா பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் இன்று காலை முதல் ஒரு லிட்டர் ரூ.5.30-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நயாரா பங்குகளில் நெல்லையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.106.47 பைசாவாகவும், டீசல் 1 லிட்டர் ரூ.95.84 ஆகவும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் பல நகரங்களில் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நயாரா நிறுவனம் தற்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

நயாரா என்பது தனியார் நிறுவனம். தற்போதைய சூழலில் அங்கு மட்டும் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் பெயரில் இயங்கும் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.