தமிழக செய்திகள்

அளவுக்கு அதிகமாக மனஅழுத்த மாத்திரைகளை சாப்பிட்ட சென்னை IIT மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

விடுதி அறையில் அந்த மாணவி திடீரென மயங்கி கிடந்தார். கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் அஸ்சாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதுநிலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதி அறையில் அந்த மாணவி திடீரென மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது தோழிகள் அவரை மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், மாணவி ஏற்கனவே மன அழுத்தத்திற்கான மாத்திரை சாப்பிட்டு வருவதும், அதிகமான மாத்திரை சாப்பிட்டதால் மயக்கம் அடைந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, அவரது உறவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT