தமிழ்நாடு செய்திகள்

புதிய குற்றவியல் சட்டங்கள்... தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும்.

மாலை மலர்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வரவேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களில் மாநிலத் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிப்பதற்கான தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்.

குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. இதில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

நீதிபதி (ஓய்வு) திரு கே.சத்தியநாராயணன் ஒரு நபர் குழுவாக நியமிக்கப்பட்டதையும் வரவேற்கிறேன்.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை, சட்ட ஆசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.