தமிழக செய்திகள்

‘அவர் 3, 4 சீட்டைத் தாண்டுறதே கஷ்டம்னுதான் நான் நினைக்கிறேன்’ - விஜய் குறித்து பியூஸ் கோயல் கருத்து

விஜய்க்கு தமிழ்நாடு மக்கள் குறித்து இன்னும் புரிதல் இல்லை என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்த நிலையில், வேட்பாளர் பட்டியல் குறித்த இறுதி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் குறித்து பேசிய அவர்,

“விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் குறித்தோ, அவர்களின் கலாச்சாரம் குறித்தோ அல்லது அவர்களின் அரசியல் குறித்தோ எவ்விதப் புரிதலும் இல்லை என்று நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில் பல நட்சத்திர பிரபலங்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் வெற்றிப் பெற்றதில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பல தசாப்தங்களாகப் பொதுச் சேவை செய்து, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளாக இருந்த பிறகே முதலமைச்சர்களானார்கள். விஜய் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமாக இருந்தாலும், அந்தப் பிரபலம் வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது. இதை விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் விஷயத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.

அவருக்கு சில வாக்குகள் கிடைக்கலாம், ஆனால் அவரால் 3 அல்லது 4 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியும் என்று எனக்கு தோனவில்லை.” என தெரிவித்துள்ளார்.