திருவள்ளூரில் கணவர் ஏசி வாங்கித் தராததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல், மோனிகா தனது கணவரிடம் ஏசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
இவர் நேற்று (சனிக்கிழமை) இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆகாஷ் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) இரவு, வெக்கை அதிகமாக இருந்ததால் ஆகாஷும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளனர். மோனிகா மட்டும் அறையில் இருந்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆகாஷ் அறைக்குச் சென்று பார்த்தபோது, மோனிகா உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. திருவள்ளூர் போலீசார் இந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காதல் திருமணம் என்பதால் மோனிகாவின் குடும்பத்தினர் இவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மோனிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.