ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரால் வணிக சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டீ, காபி மற்றும் உணவு வகைகளின் விலை உயர்ந்துள்ளன.
இதற்கிடையே ஓசூரில் உள்ள ஓட்டல் நிர்வாகம் ஒன்று வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, ஓசூரில் தளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் நிர்வாகமானது, தங்களது ஒட்டலுக்கு முன்பு ஆங்கிலத்தில் விளம்பர பலகை ஒன்று வைத்துள்ளது. அதில் வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும், 2 வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு தினமும் 2 சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், இதுவரை 2 பேர் வணிக சிலிண்டர்களை கொடுத்து தினமும் பிரியாணி வாங்கி செல்கின்றனர் என்று ஓட்டல் நிர்வாகத்தினர் கூறினர்.