தமிழக செய்திகள்

சென்னையில் ஓட்டல் தொழில் கடும் பாதிப்பு: வணிக சிலிண்டர் ரூ.7,500-க்கு விற்பனை

வணிக சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

சென்னை:

வளைகுடா போர் காரணமாக வணிக சிலிண்டர்கள் வினியோகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சாலையோரமாக உள்ள பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. மாலை நேரங்களில் பஜ்ஜி, வடை போட்டு விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளும் செயல்படாமல் உள்ளன.

அதே நேரத்தில் சைவ அசைவ ஓட்டல்களை நடத்தி வருபவர்கள் ஓட்டல்களை எக்காரணம் கொண்டும் மூடிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் ஓட்டலை நடத்தி வருகிறார்கள்.

உணவு பொருட்களின் வகைகளை குறைத்துக் கொண்டு காலையில் சில மணி நேரம் இரவில் சில மணி நேரம் மட்டுமே ஓட்டல்களை திறந்து வைத்து பணி செய்து வருகிறார்கள்.

உணவுப் பொருட்களின் விலையையும் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரையிலும் உயர்த்தி இருக்கிறார்கள்.

இப்படி பகுதி நேரமாக ஓட்டல்களை நடத்துவதற்கு தேவையான சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் எத்தனை நாட்கள் இப்படி யே காலத்தை தள்ளுவது என்று தெரியவில்லை என ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ரூ. 2 ஆயிரம் விலை கொண்ட வணிக சிலிண்டர்கள் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

ஆரம்பத்தில் ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனையான வணிக சிலிண்டர்கள் பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமானது.

இன்று வணிக சிலிண்டர்கள் ரூ.7,500 க்கு கள்ளச்சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஒரு சில ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் தொழிலை மிகுந்த சிரமத்துக்கிடையே நடத்தி வருகிறோம். வணிக சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

இது போன்ற நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இப்படி பதுக்கி வைக்கப்பட்டுள்ள வணிக சிலிண்டர்களை பறிமுதல் செய்து அதனை ஓட்டல் உரிமையாளர்களுக்கு விலைக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.